Thursday 10 July 2014

உறக்கம் வராத இரவில்......

உறக்கம் வராத
இரவொன்றில்

பூத்த வனம் மேலே
பட்டாம்பூச்சிகளோடு
பறந்துகொண்டிருந்தேன்.

எங்கிருந்தோ வந்த
கழுகுகள் 
பட்டாம்பூச்சிகளைக்
கவ்விச்சென்றன.

அலைகடல் நடுவே
அழகு மீன்களோடு
நீந்திக்கொண்டிருந்தேன்.

திடீரென வந்த
திமிங்கலம்
மீன்களைத் தின்று திரும்பியது.

நிலவொளியில்
சில தேவதைகளோடு
உரையாடிக்கொண்டிருந்தேன்.

பொறுக்காத பூதங்கள்
நிலாவையே
திருடிச் சென்றன.

பனிஈரப் புல்வெளியில்
கனி கொறித்த அணில்களோடு
விளையாடிக் கொண்டிருந்தேன்.

விஷம் கொண்ட பாம்புகள்
அவைகளையும்
விழுங்கிவிட்டன.

பேசும் கிளிகளோடு
பேசலாமென்று
கிளம்பினேன்.

வீதி நாய்கள் 
வெறிகொண்டு
பாய்வதற்குள்....

என்னைக் காப்பாற்றி
இரவிடம்
ஒப்படைத்தேன்.