"கவிதை எழுதுவீங்களாமே
என்னைப் பற்றியும்
எழுதுவீங்களா..."
வாரம் இருமுறை
என் வாகனத்திற்கு
பெட்ரோல் நிரப்பும் பெண் கேட்டாள்.
எழுதலாம்.......
பள்ளிச்சீருடை நிறத்திலேயே
ஒரு பணிச்சீருடை.
புத்தகப்பை தாங்கும் தோளில்
ஒரு பணப்பை.
மேயும் கண்களைத்
தவிர்த்தபடி வேலைக்கவனம்.
தேநீர் சிகரெட்
அரட்டையென
இருக்கும் இடம் விட்டு
அடிக்கடி அகன்றுவிட முடியாமை.
வகுப்பறையில் அமரவைக்கத்தவறி
நெருப்பறையில்
நிற்க வைத்த வறுமை.
ஒருநாள் விடுமுறை எடுத்தாலும்
திணறிப்போகும்
குடும்ப வாகனம்.
எழுதிக்கொண்டிருக்கும்போதே
அலங்காரமற்ற அவளிடம்போய்
அடைக்கலமானது
என் கவிதை.
பெட்ரோல் எரிச்சலால்
சிவந்திருந்தன
அவளது கண்கள் .
அழுதிருந்ததால்
சிவந்திருந்தது
என் கவிதை.