ஒவ்வொரு வேளையும்
துள்ளிக் குதித்து
வாய்திறந்து வரவேற்கின்றன
கண்ணாடி நீரின் வண்ண மீன்கள்.
நீரூற்றும்
ஒவ்வொரு நாளும்
காற்றிலசைந்து
தளிர்களாய்ச் சிரிக்கின்றன
இல்லத்தை அலங்கரிக்கும்
தொட்டிச் செடிகள்.
அருகில் வரும்
ஒவ்வொரு முறையும்
உடலுதறி எழுந்து
கனிந்து உறவாடுகின்றன
காவலிருக்கும் செல்லப்பிராணிகள் .
வாகனப் பயணத்தின்
ஒவ்வொரு நேரமும்
சிறகடித்து
ஒலியெழுப்புகின்றன
கிளைகளிலிருக்கும் சிநேகக் குருவிகள்.
நேரெதிரில் கண்டு
புன்னகைக்கவோ கைகுலுக்கவோ
வாய்ப்பிருந்தும்
முகம்திருப்பி விலகிச்செல்லும்
நண்பர்களை நினைத்து
சிரித்துக்கொள்கின்றன
மனதுக்குள் நீந்தும் மீன்கள்.