Tuesday 23 May 2017

யாரோ ஒருவர்

யாரோ ஒருவரின்
துயரத்தை விரட்டுகிறது
வீணையின் சில நரம்புகள்.

யாரோ ஒருவரின் 
தற்கொலையைத் தடுக்கிறது
கவிதையின் ஒரு வரி.

யாரோ ஒருவரின்
தனிமையைத் தகர்க்கிறது
ஜன்னல் வந்தமரும் குருவி.

யாரோ ஒருவரின்
கண்களை நனைக்கிறது
ஸ்வர்ணலதாவின் போறாளே பொன்னுத்தாயி.

யாரோ ஒருவரின்
தைரியத்தை வளர்க்கிறது
நண்பனின் கைகுலுக்கல்.

யாரோ ஒருவரின்
கோபத்தைக் கிளருகிறது
இதுபோன்ற சில வரிகள்.

நீங்களா அந்த
யாரோ ஒருவர்...?

Saturday 25 March 2017

சிட்டுக்குருவி...... சிங்கப்பூரில் 25.03.2017

சிட்டுக்குருவியொன்று
அலகுகுத்தி சிறகசைத்து
நேசமிசைத்து நெருங்கிநடந்தது
என்னருகே.

அதன் மகிழ்வான தருணமிது
என்பதறிந்து
காரணிகளை ஆராய்ந்தேன்.

சிட்டுக்குருவி
எல்கேஜி சேரவில்லை.
வேலைதேடும் வேலையில்லை.
இன்னும்
திருமனமாகவில்லை.
சொத்துசேர்த்துவைக்கவில்லை.
வங்கியில் கடனில்லை.
வருமானவரி கட்டவில்லை.
சாதகம் பார்ப்பதில்லை
சர்க்கரை நோய் அறியவில்லை.
காதலித்து நோகவில்லை.
மிக முக்கியமாய்
கவிதையெழுதும் வழக்கமில்லை.

வேறென்ன இருக்கப்போகிறது
அகன்ற வானில்
ஆனந்தபவணிவர.......

Wednesday 22 March 2017

சோலச்சி யின் விமர்சனம்.... 22.03.2017

**தேவதைகளால் தேடப்படுபவன்** 
               - கவிஞர் தங்கம் மூர்த்தி.
               
             கவிதை நூல்

       சோலச்சியின் பார்வையில்..........

   தேவதைகளால் தேர்ந்தெடுக்கப்பட்ட புதுக்கோட்டை  கவிஞர் தங்கம் மூர்த்தி அவர்களால் படைக்கப்பட்ட நூல்தான் "தேவதைகளால் தேடப்படுபவன் ". நிகழ்கால சமூகத்தை அப்படியே படம் பிடித்துக் காட்டுகிறது. அவரவர் வாழ்க்கையை வாசிக்கும் போதே உணர வைக்கிறார் கவிஞர்.

" இப்போது
மங்கலாய்த் தெரிகிறதெனக்கு
அம்மா இல்லா
இவ்வுலகு.....!!!

        என்று தனது தாய்க்கு நூலை சமர்ப்பணம் செய்து தொடங்குகிறார்.

    தமது கருத்துகள் எந்த வடிவத்தில் இருந்தாலும் அவை வாசிப்போருக்கு புரியும் நடையில் இருக்கும்போதுதான் அவை வெற்றி பெறுகின்றன.  கவிஞர் அவர்கள், வெற்றி பெற்ற கவிதைகளையே படைத்துள்ளார். 

"இருள்
நழுவி விலகி
நிலவுக்குப்
பாதையமைக்கிறது.......
..........,,,
...........,,,
"அப்போது
பூமியெங்கும்
பூத்திருந்தன
நிலவுகள்...!!"

  என்று நிலவு பூக்கும் பூமி என்கிற தலைப்பில் தமது நிலவினை பூமியெங்கும் பூத்துக்குலுங்கச் செய்கிறார்.

   சொற்களைப் பற்றிச் சொல்லும்போது தமது சொல்லாடலை அழகாக நடனமாடச் செய்திருக்கிறார்...

"சூடேற்றும் தருணத்திற்காகத்
தவமிருக்கின்றன
எல்லாச் சொற்களும்....!"

    எவ்வளவு ஆழமான ஆய்வு என்பதை நம்மால் உணர முடிகிறது. மிகப்பெரிய இயந்திரங்களைக்கூட கையாளுவது எளிது. ஆனால் சொற்களை எல்லோராலும் கையாள முடியாது. சொற்களின் வித்தையை கற்றறிந்தவர்களால் மட்டுமே இது சாத்தியமாகும். 

   ஒவ்வொரு மனிதனும் தன்னிலை உணர்வதில்லை.  பிரச்சினைகளுக்கு முக்கிய காரணமே தன்னை உணராததுதான். இதுதான் வாழ்க்கை என்று உணர்ந்து விட்டால் எல்லாம் இன்பமயமாகிவிடும். எல்லோருக்குமான வாழ்க்கை மரணத்தின் அருகில்தான் உணர வைக்கிறது. கவிஞர் அவர்கள் மெய் உணர்தல்  என்கிற கவிதையில் 

"நன்றாய்
வாழ்ந்ததைப் போலிருக்கிறது
என்றோ
செத்ததைப் போலவும் இருக்கிறது..."

  இதுதான் வாழ்க்கை. வாழ்க்கையை நமக்கு உணர வைக்கிறார்.

  கவிஞர் அவர்கள் தனது பலமாக கருதுவது எது தெரியுமா .....

"ஒருவேளை
சாத்தான்களை
சந்திக்க நேர்ந்தால்
உன்
புன்னகையைக் கொண்டே
விரட்டுகிறேன் ...!

   என்கிறார்.  ஆனால் நாம் சிரிக்க மறந்து சீரழிந்து கொண்டு இருக்கிறோம். புன்னகைதான் வாழ்க்கையின் வழித்துணை. இருப்பதில் இருந்து புன்னகையை கண்டறிய வேண்டும். எந்தக் கடைதனிலும் விலைக்கு கிடைக்காது புன்னகை.  அந்த புன்னகையால் நட்பு வட்டத்தை பெருக்கவும் முடியும். சாத்தான்களை விரட்டி அடிக்கவும் முடியும்.
   
  திருவிழாக்கள் எதற்கு கொண்டாடுகிறோம் என்று தெரியாமலேயே திருவிழாக்களை கொண்டாடி வருகின்றோம். ஊர்த்திருவிழாக்களின் கடைசி நிகழ்வாக மஞ்சள் நீராடுதல் என்ற நிகழ்வு நடக்கும். திருவிழா காலங்களில் கூட்டம் அதிகமாக இருக்கும். பலதரப்பட்டவர்களும் கூடியிருப்பார்கள். எந்தவிதமான நோய் தாக்குதல்களும் வந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான் கிருமிநாசினியான மஞ்சளை நீரில் கலந்து நீராடினார்கள் நம் முன்னோர். ஆனால் இன்று வண்ணப் பொடிகளை தூவி விளையாடிக்கொண்டு இருக்கிறோம்.

திருவிழாக்களைப் பற்றி கவிஞர் இவ்வாறு கூறுகிறார் ....

  "குழந்தைகளைக் கண்டதும்
குதூகலத்துடன்
துள்ளுகின்றன
திருவிழாக்கள்...." 
     
என்கின்றார். திருவிழாக்கள் மூலம் ஏதோவொரு வகையில் நம் மகிழ்ச்சியாக இருந்தாலும்,  குழந்தைகளால்தான் திருவிழாக்களே மகிழ்ச்சியாக இருக்கின்றன என்கின்றார். கவிஞர் அவர்கள் இந்த இடத்தில் குழந்தைக் கவிஞராகவே மாறியிருக்கிறார்.

   எல்லோராலும் கொண்டாடப்படக்கூடிய கவிதை இது. எல்லோரது வாழ்க்கையிலும் கூடவே வரக்கூடிய கவிதை. நாய்கள் பற்றிய கவிதை.

"நாய்களைப் பற்றிய
கவிதைகள் பெரும்பாலும்
நாய்களைப் பற்றியதாய்
இருப்பதில்லை ....
......,,,
......,,,
எங்கள் தெருவில்
வேலைவெட்டியின்றித்
திரிகின்றன
பல நாய்கள்...
....,,,
.....,
என் எலும்புத் துண்டுகளை
கடித்து
என்னையே கடிக்க
முனைகின்றன.....
.....,,,,
.....,,,
நாய்களோடு வாழவும்
பழகிக்கொள்ள வேண்டியிருக்கிறது ....

நாய்களைப் பற்றிய
கவிதைகள் பெரும்பாலும்
நாய்களைப் பற்றியதாய்
இருப்பதில்லை ....!

  இப்போது புரிந்திருக்குமே..... எல்லோருக்கும் ஏற்ற கவிதையிது. இனி நாய்களின் எண்ணிக்கை வெகுவாக குறைய தொடங்கலாம். நான் நாய்கள் என்று சொன்னது நாய்களை இல்லை.

   "எம்முறையிலும்
வேறெவ்வகையிலும்
எதுவொன்றும்
செய்ய முடியாது என்னை...

காரணம் நான்
தேவதைகளால் தேடப்படுபவன்.."

  என்று கவிதையொன்றில் குறிப்பிடுகிறார். தன்னம்பிக்கை இழந்து பலவீனமாய் இருப்போர் இதை வாசிக்க நேர்ந்தால் அவர்களுக்குள் தன்னம்பிக்கை ஊற்றெடுக்கும். தன்மீது நம்பிக்கை உள்ளோருக்கு தன்னுள் மேலும் சக்தி அதிகரிப்பதை உணர முடியும். 
    
     மற்றவர்களை பார்த்து பார்த்து பொறாமை கொண்டு தம்முடைய வாழ்க்கையை பலரும் வாழாமலேயே செத்துவிடுகிறார்கள். இன்று முகத்துதி பாடுவது அதிகரித்துவிட்டது. "இருவேறு சிரிப்புகள் " என்ற கவிதையில் முகத்துதி பாடுவதை மிக அழகாக நயம்பட சொல்லியிருப்பார் கவிஞர்.

    ஒசைகளும் சத்தங்களும் என்கின்ற கவிதையில் 

 "எங்கெங்கு கேட்பினும்
மௌனங்களை மிதிக்கும்
மரணச்சத்தம்...."

  என்று இயற்கைக்கு முரணான வாழ்க்கை மீது வெகுண்டெழுந்து வேதனைப் படுகிறார் கவிஞர்.

    "நடைப்பயிற்சி செலவோரில்
பலரும்
நடைப்பயிற்சி செய்வதில்லை
நான் உள்பட...."

   என்று ஒரு கவிதையில் குறிப்பிடுகிறார். என்ன என்று ஆச்சரியமாக இருக்கிறதா...!! நூலை வாங்கி நீங்களே வாசித்து பாருங்கள். உண்மை புரியும்.

     இன்றைய அரசியலைப் பற்றி குறிப்பிடும் பொழுது...

 "மனுக்களை வாசித்து
கண்ணீரால்
ததும்புகின்றன
குப்பைத் தொட்டிகள்....!

  உண்மை தானே கவிஞர் குறிப்பிடுவது. 

      சமூகம் சார்ந்து, காதல் சார்ந்து என்று ஒவ்வொருவரது வாழ்க்கையையும் கவிதையாக படைத்திருக்கும் இந்த "தேவதைகளால் தேடப்படுபவன் " கவிதை நூல் எல்லோரது கைகளிலும் தவழ வேண்டிய நூல். தமிழ் கூறும் நல்லுலகம் கவிஞர் தங்கம் மூர்த்தி அவர்களை மேலும்மேலும் கொண்டாடி மகிழும் என்பது திண்ணம். இதுவே எனது எண்ணம்.

  நூல் ஆசிரியர் : கவிஞர் தங்கம் மூர்த்தி
புதுக்கோட்டை 

பேச : 9443126025

பக்கங்கள்: 72

பதிப்பு :டிசம்பர் 2016

விலை  :ரூபாய் 60/-

 நூல் வெளியீடு :

படி வெளியீடு
கே.கே.நகர் மேற்கு,
சென்னை  - 600078
(பாண்டிச்சேரி கெஸ்ட் ஹவுஸ் அருகில்)
பேச : 8754507070

          அன்பு பண்பு பாசம்
    
நட்பின் வழியில் எந்நாளும்
 
       சோலச்சி புதுக்கோட்டை 
       பேச : 9788210863

Sunday 29 January 2017

மகாசுந்தர் நூல் விமர்சனம்

ஞாயிறு, 29 ஜனவரி, 2017

தேவதைகளின் காதலன் (கவிஞர் தங்கம் மூர்த்தி அவர்களின் 'தேவதைகளால் தேடப்படுபவன்' நூல் குறித்த என் பார்வை 



தேவதைகளின் காதலன்

 (கவிஞர் தங்கம் மூர்த்தி அவர்களின் 'தேவதைகளால் தேடப்படுபவன்' நூல் குறித்த என் பார்வை) 

கவிஞர் தங்கம் மூர்த்தி அவர்களின் ஒன்பதாவது நூல் 'தேவதைகளால் தேடப்படுபவன்'. செய்நேர்த்தி மிக்க நகைத்தொழிலாளி நுட்பத்தோடும் அழகோடும் ஆபரணம் செய்வதைப்போல், கவிதைகளை இயற்றியுள்ளார்.

     கவிஞரின் செய்நேர்த்தியோடு அவரின் அனுபவமும் சேர்ந்து, புதிய உணர்வனுபவத்தை நம்மையும் உணரச் செய்கிறது.

"என் அகவீணையை ஓர் அற்புதசக்தி மீட்டுகிறது. நான் சிந்திக்காமலேயே எதோ ஒன்று என் உள்ளத்தில் பேசுகிறது! அதே நான் எழுதுகிறேன்!" என்பார் மில்டன். "அடிமனசில் முகிழ்த்துப் பூத்துநிற்கும் அனுபவச் செழுமையின் சத்திய வெளிப்பாடுதான் கவிதை" என்பார் கவிஞர் பாலா.

ஒரு கவிதை எப்போது ஜெயிக்கும்..? நெருப்பு சுடுகிறது என்று எழுதினால் அதே உணர்வும் வலியும் வாசிக்கின்றவர்களுக்கும் ஏற்படுமானால் கவிஞனை முந்திக்கொண்டு கவிதை ஜெயத்துவிடுகிறது.

     "தூண்டிற் புழுவினைப்போல் -வெளியே 

               சுடர் விளக்கினைப் போல்

     நீண்ட பொழுதாக -எனது 

               நெஞ்சந் துடித்த தடீ!

என்ற பாரதியின் பாடல்,மோக வலியை நமக்கும் கடத்துகிறது. தூண்டிலில் அகப்பட்ட புழுவின் வேதனை வெளியே தெரியாது. எரியும் சுடர் விளக்கினைக் கூர்ந்து பார்த்தால் அதன் துடிப்பு தெரியும். உள்ளும் புறமும் காமத்தினால் நெஞ்சம் துடிப்பதை இதைவிட வேறு வரிகளால் (வலிகளால்) காட்டவியலாது.

       கவிஞர் தங்கம் மூர்த்தி முதல் கவிதையிலேயே அவரின் உணர்வை நமக்கும் கடத்துகிறார்.

      ..."இப்போது 

          மங்கலாய்த் தெரிகிறதெனக்கு 

          அம்மா இல்லா 

          இவ்வுலகு"  

  கவிதை எங்கிருக்கிறது..? சொற்களிலா?  இல்லை சொற்கள் வெறும் கருவிதான். "ஓர் உண்மையான உணர்ச்சி தன்னை வெளிப்படுத்தத் துடிக்கும்போது, அது தனக்கான சொற்களைத் தானே தேர்ந்தெடுத்துக்கொள்கிறது.கவிஞன் வெறும் கருவிதான்"என்ற ஓர் அறிஞனின் கூற்று எத்தனை நுட்பமானது..?! கவிதை எப்போது பிறக்கும்..? சொற்கள் சூல் கொண்டால் கவிதை பிறக்கும்.கவிஞன் சொற்களைக் கைப்பற்ற என்னபாடு பட்டிருப்பான்? இதோ கவிஞரின் 'கவிதைக்கு மிக அருகில் சில சொற்கள்' கவிதைப் பாருங்கள்.

         .....அகப்படாமல் 

              சட்டெனப் பறந்து விடுகின்றன 

              சில சொற்கள் 

             பலமுறை விரும்பி 

             பணிந்தழைத்தும்

             வரமறுக்கின்றன 

              சில சொற்கள்