Saturday 30 November 2013

என் பண்டிகையின் நாட்குறிப்பிலிருந்து....

ஒவ்வொரு பண்டிகையிலும்
அப்பா
குதூகலமாய் இருப்பார்.

தனித்தனி கூடுகளில் இருப்பவர்கள்
தாய்க்கூட்டிற்கு
வருவதை எதிர்பார்த்து
வாஞ்சையோடு வாசலில் நிற்பார்.

ஒன்றாய் அமர்ந்து உண்ணும்போது
உற்சாகமாயிருப்பார்.

பிள்ளைகள்
புத்தாடை அணிந்து  பவணி வருவதை
பெருமையோடு பார்ப்பார்.

குடும்ப மாநாட்டுத் தலைமையேற்று 
குழந்தையைப் போல் துள்ளுவார்.

பெரிய குறும்புகளையும்
பொறுமையோடு ரசிப்பார்.

சாதாரன நகைச்சுவைக்கும்
சத்தம்போட்டுச் சிரிப்பார்.

கார் வாங்கிய சேதி சொன்னால்
கர்வத்தோடு
அம்மாவைப் பார்ப்பார் .

இந்த நாள் நீளாதா
என்று ஏங்குவார்.

அடுத்த பண்டிகை வரை
அந்த நாளைப் பற்றியே
அம்மாவிடம் பேசுவார்.

அப்பாவை நினைத்தபடி
வாசல்படியில் அமர்ந்திருந்தேன்---
என்
பிள்ளைகள் வருகைக்காக.

1 comment:

  1. வணக்கம் அய்யா
    நான் பொங்கலை தீபாவளி போல் பலகாரங்களோடு கொண்டாடுவேன்
    பலஆண்டுகளாக. எங்கள் குடும்பத்துப்பிள்ளைகள்அனைவரும் எந்த நாட்டில் இருந்தாலும் வந்துவிடுவார்கள் .கரண்டி கைமாறும் நாள் .அதாவது ஆண்பிள்ளைகள் தான் அனைத்தும் செய்வார்கள் .உங்கள் கவிதை அந்த நாளுக்கு ஏங்கவைத்துவிட்டது .உயிரோட்டமாய் என் உணர்வுகளைத்தூண்டிவிட்ட கவிதை .அருமை .

    ReplyDelete