Saturday 30 November 2013

மனதுக்குள் நீந்தும் மீன்கள்

இரையிடும்
ஒவ்வொரு வேளையும்
துள்ளிக் குதித்து
வாய்திறந்து வரவேற்கின்றன
கண்ணாடி நீரின் வண்ண மீன்கள்.

நீரூற்றும்
ஒவ்வொரு நாளும்
காற்றிலசைந்து
தளிர்களாய்ச் சிரிக்கின்றன
இல்லத்தை அலங்கரிக்கும்
தொட்டிச் செடிகள்.

அருகில் வரும்
ஒவ்வொரு முறையும்
உடலுதறி எழுந்து
கனிந்து உறவாடுகின்றன
காவலிருக்கும் செல்லப்பிராணிகள் .

வாகனப் பயணத்தின்
ஒவ்வொரு நேரமும்
சிறகடித்து 
ஒலியெழுப்புகின்றன
கிளைகளிலிருக்கும் சிநேகக் குருவிகள்.

நேரெதிரில் கண்டு
புன்னகைக்கவோ கைகுலுக்கவோ
வாய்ப்பிருந்தும்
முகம்திருப்பி விலகிச்செல்லும் 
நண்பர்களை நினைத்து
சிரித்துக்கொள்கின்றன
மனதுக்குள் நீந்தும் மீன்கள்.

1 comment:

  1. அய்யா வணக்கம்
    (வணக்கம் சார்ன்னு சொல்வது ஆம்மாம் சாருன்னுசொல்வதுசரியில்லைன்னு நெனைக்கிறேன் அய்யா என்பது மரியாதைக்குறியநல்ல தமிழ் சொல்ஏற்பீர்கள் என்றே நினைக்கிறேன்)
    எதிர்பார்ப்புகள் ஏமாற்றங்களாய் எதிர் வரும்போது ,ஏற்றுக்கொள்வது இயல்பாகிப்போனால் எல்லாம் இனிமையே .

    ReplyDelete