Tuesday 13 March 2012

என் பண்டிகையின் நாட்குறிப்பிலிருந்து

என் பண்டிகையின் நாட்குறிப்பிலிருந்து

                    ஒவ்வொரு
                    பண்டிகையிலும்
                    அப்பா
                    குதுகலமாய் இருப்பார்.

                    தனித்தனி
                   கூடுகளிருப்பவர்கள்
                   தாய்க் கூட்டிற்கு
                   வருவதை எதிர்ப்பார்த்து
                   வாஞ்சையோடு
                   வாசலில் நிற்பார்.

                   ஒன்றாய் அமர்ந்து
                   உண்ணும் போது
                   உற்சாகமாயிருப்பர்.

                   பிள்ளைகள்
                   புத்தாடை அணிந்து
                   பவனி வருவதை
                   பெருமையோடு பார்ப்பார்.

                  குடும்ப மாநாட்டுத்
                  தலைமையேற்று
                 குழந்தையைப் போல்
                  துள்ளுவார்.

                  சாதாரண நகைச்சுவைக்கும்
                  சத்தம் போட்டு சிரிப்பார்.

                 பெரிய குறும்புகளைக் கூட
                 பொறுமையோடு ரசிப்பார்.

                 கார் வாங்கிய 
                 சேதி சொன்னால்
                 கர்வத்தோடு
                அம்மாவை பார்ப்பார்.

                 பாசத்தில் நனைத்த
                 வார்த்தைகளால்
                 பக்குவமாய் அறிவுரைப்பார்.

                 இந்த நாள்
                 நீளாதா என்று ஏங்குவார்.

                 அடுத்த பண்டிகை வரை
                 அந்த நாளைப் பற்றியே
                 அம்மாவிடம் பேசுவார்.

                 அப்பாவை நினைத்தபடி
                 வாசல்படியில்
                 அமர்ந்திருந்தேன் -
                 என்
                 பிள்ளைகள் வருகைக்காக.

No comments:

Post a Comment